Sunday 24 November 2013

தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்ப்போம்

இணைய உலகமும், சமூக வலைத்தளங்களும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்ட இந்நாட்களில், அறிவினை வளர்க்க வேண்டிய இணையம் பல உண்மைக்குப் புறம்பான அல்லது திரிவுபடுத்தப்பட்ட தகவல்கள் அல்லது  புரட்டுக்கள் (hoaxes) பரப்பப்படுவதற்கு முக்கிய காரணியாக மாறி வருகின்றது. பெரும்பாலும் மொழிப்பற்று, மற்றவர்கள்களுக்கும் அறிவினை பகிர விரும்புதல், மற்றவர்களுக்காக அனுதாபப்படுதல் போன்ற நற்பண்புகளே இவ்வாறான தவறான தகவல்கள் வேகமாகப் பரவுவதற்குக் காரணமாகிவிடுகின்றன என்பதுதான் வேதனையானது. குறிப்பாக முகப்புத்தகம், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள் போன்றவை இதற்கான ஊடகங்களாக செயற்படுகின்றன. சிலவேளைகளில் ஒரு சில பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்ற வெகுசனத் தொடர்பு ஊடகங்களும்கூட இப்படியான தகவல்களை அவற்றின் உண்மைத் தன்மையை ஆராயாது வெளியிடுவது வழமையாகிவிட்டது.

ஒரு விடையத்தைப்பற்றி தெரியாதிருப்பதைவிட, தவறான அல்லது திரிவுபடுத்தப்பட்ட தகவல்களை தெரிந்திருப்பதும், அவற்றினை நம்புவதும், அதன்படி நடப்பதும், அவற்றினையே சரியென்று வாதிடுவதும், பல வேளைகளில் முட்டாள்தனமாகவும், சில வேளைகளில் தமக்கோ மற்றவர்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்துவிடுகின்றது.  இன்னும் சிலவேளைகளில் அந்நபரின் தகுதியையே சந்தேகிக்கவும் வைத்துவிடுகிறது.

இப்படியான உண்மைக்குப் புறம்பான தகவல்களில் சில வகைகள்:

(1) ஆபத்துகளும் அவற்றிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளும் வழிமுறைகள் என்பதாகப் பரப்பப்படும் புரட்டுக்கள்:

உதாரணம் 1: 
மூலம்: இணைய நண்பர்கள்

மேலே வேதிப்பொருளுக்கும் கிருமிக்கும் வித்தியாசம் தெரியாத ஒருவரால் உருவாக்கப்பட்ட இவ்வதந்தியில் குறிப்பிடப்படும் 'வெள்ளி நைட்ரோ ஆக்சைட்டு' என்றொரு வேதிப்பொருளே கிடையாது.

உதாரணம் 2: தானியங்கி பணமெடுக்கும் இயந்திரங்களில் பணமெடுத்துக்கொண்டிருக்கும் போது திருடன் மிரட்டினால் இரகசிய குறியீட்டு இலக்கத்தினை கடைசி இலக்கத்திலிருந்து முதல் இலக்கம் என்ற வரிசையில் உள்ளிட்டால் காவல்துறை வந்து உங்களைக் காப்பாற்றும் என்பது போன்ற தகவல்.

உதாரணம் 3: கணினி வைரஸ் ஒன்றிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள் என்று மிரட்டி அதற்குப் பரிகாரமாக கணினி இயங்குவதற்கு அடிப்படைத் தேவையான System32  போன்ற கோப்பு ஒன்றினையே அகற்றச்சொல்லும் புரட்டு.

உதாரணம் 4: திரையரங்குகளின் ஆசனங்களில் எய்ட்ஸ் நோய்பரப்பும் ஊசிகள் வைக்கப்படுவதாக கிலிகொள்ள வைக்கும் புரட்டு.

(2) தமிழின்/தமிழனின் பெருமைகள் என்பதாகப் பரப்பப்படும்  புரட்டுக்கள்:

உதாரணம் 1: தமிழே உலகத்தில் முதல் மொழி எனும் காணொளி. அதற்கு 'இதோ ஒரு அதிர்ச்சிகரமான செய்தி' என்று தலைப்பு வேறு. அதிலே மொழி விற்பன்னர் என்று குறிப்பிடப்படும் அலெக்ஸ் கொலியர் (Alex Collier) என்பவர் தமிழைப்பற்றிக் கூறும் ஒற்றை வரி இடம்பெறும். இந்த நபரைப்பற்றி கூகிள் தேடுபொறி தரும் தகவல்களே போதும் இந்தத் தகவலின் நம்பகத்தன்மைக்கு. இப்புரட்டு கோட்-சூட் போட்டவன் சொல்வதெல்லாம் உண்மையென்று நம்பும் நம்மவர்களுக்காக தமிழ்த் தொலைக்காட்சியொன்றிலும் ஒளிபரப்பப்பட்டாதாக அறியப்படுகின்றது.

உதாரணம் 2:  "நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த திருநள்ளாறு சனி பகவான்" எனும் புரட்டு. "எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர் ஆனால் காரணம் புரியவில்லை. அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறன." இப்படி மக்களை முட்டாளாக்குவதற்கு நாசாவினையே துணைக்கிழுக்கும்  ஒரு புரட்டு.

(3) நண்பர்கள் அனைவருக்கும் தகவலைப் பரப்புவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்  அல்லது நன்மையொன்றினைப்  பெற்றுக்கொள்ளுங்கள் எனும் மின்னஞ்சல்களும் முகப்புத்தகச் சுவர் பதிவுகளும்.

உதாரணம் 1: காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவுங்கள், கோரமான புகைப்படங்களுடன் வரும் சாகவிருக்கும் ஒருவருக்கு உதவுங்கள் போன்ற மின்னஞ்சல்களும் முகப்புத்தகச் சுவர் பதிவுகளும். அதனைச் செய்யாவிடத்து உங்களுக்கு கல்நெஞ்சம் என்று சபிக்கப்படுவதுமுண்டு

உதாரணம் 2: மின்னஞ்சலை அல்லது முகப்புத்தகச் சுவர் பதிவினை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பினால் நிறுவனமொன்று இலவசமாய் பொருட்களைத் தரும், அல்லது நிவாரண நிதியொன்றிற்குப் பங்களிப்பினை வழங்கும்.

அண்மையில் எனது முகப்புத்தாக சுவரில் நண்பர் ஒருவரால் பதிவேற்றப்பட்ட தகவல் இது:

"சற்றுமுன் ஆங்கிலத்தில் நான் படித்த செய்தி..இங்கே உங்களுக்காக தமிழில் மொழிப் பெயர்த்துள்ளேன்.. படிக்கும்போதே என் கண்களை கலங்க வைத்த செய்தியும் கூட

14 வயது சிறுவன் தன் மாற்றந் தந்தையால் 6 முறை சுடப்பட்டு இருக்கிறான். காரணம் அவன் தன் தாயின் இரண்டாவது கணவனால் கற்பழிக்கப்பட இருந்த தன் தங்கையினை காப்பாற்ற போராடியதே. அச்சிறுமிக்கு சிறு காயங்கள்கூட இல்லாமல் காப்பாற்றிய சிறுவனின் துணிச்சலை பாராட்ட வார்த்தைகள் இல்லை

அச்சமயம் அவன் அம்மா வேலைக்கு சென்றிந்தார். தற்சமயம் அச்சிறுவன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறான். மருந்துவர்கள் அவனுக்கு அதிக செலவு வைக்கும் ஓர் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவன் பிழைக்க முடியும் என்று கூறி இருக்கிறார்கள். அவனின் ஏழை தாயாரால் அவ்வளவு பணம் திரட்ட முடியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறார்.

முகநூல் நிறுவனம், இச்செய்தியை ஒரு முறை பதிவு செய்வதற்கு 45 சென்ட்ஸ் தர முன் வந்துள்ளது. ஆகவே நாம் அனைவரும் இதை பகிர்வதின் மூலம் அச்சிறுவனுக்கு உதவ முடியும். அது மட்டும் அல்லாமல் இதன் மூலம் அந்த வீர சிறுவனுக்கு ஓர் ‪#‎சல்யுட்‬ போடலாம். தயவு செய்து இப்பதிவினை அதிகமாக பகிரவும். ‪#‎மனிதனாய்‬ இருக்க பணம் தேவை இல்லை.

இச்சிறுவன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்! (thank to tamil.......)"


யாரோ ஒருத்தர் பத்திரிகைச் செய்தியை வாசித்தாராம், அதை தமிழில் மொழிபெயர்த்தாராம், முகப்புத்தகத்திலும் போட்டாராம். உடனே முகப்புத்தக நிறுவனம் ஒவ்வொரு விருப்பு வாக்கிற்கும் 45 சதம் கொடுக்கிறதாம். எப்படியெல்லாம் கதைவிடுகிறார்கள். அதைவிடக் கொடுமை இதுவெல்லாம் உண்மையாய் இருக்குமோ என்று கொஞ்சம்கூட சிந்திக்காமல் இதுபோன்ற புரட்டுக்களை அப்படியே மற்றையவர்களின் முகப்புத்தக சுவர்களிலும் பதிக்கும் நபர்கள் நிறையவே இருப்பது.  

(4) தவறான புரிதல்களினால்  அல்லது தகுதியற்றவர்கள் அறிவியல் சார்ந்த செய்தியாசிரியர்களாய் இருப்பதால்  வெளியாகும் உண்மைக்குப் புறம்பான செய்திகள்:

உதாரணம் 1:  "வானில் நிகழும் அற்புத நிகழ்வு! இன்று நிலவு நீல நிறத்துடன் தோன்றும்!" (தினமணி செய்தி, 31-12-2012) என்று ஓர் செய்தி வெளியானது. உண்மை யாதெனில், ஒரு நாட்காட்டி மாதத்தினுள் இரண்டாவது முறையாகவரும் பௌர்ணமியினை நீல நிலா (Blue moon) என்பது ஆங்கில வழக்கம். அதனைத் தவறாகப் புரிந்துகொண்டது மட்டுமில்லாது 'வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை ஆகியவை காரணமாக இந்த நிறம் ஏற்படும் என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர் என். ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்' என்று அந்த முற்றிலும் தவறான செய்திக்கு ஒரு ஆதாரத்தையும்(!!!) முன்வைத்தது தினமணி.

உதாரணம் 2: "காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு - கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு" (தினமலர் செய்தி, 14-01-2013) என்றது இன்னோர் செய்தி. விஞ்ஞானத்தின்  அடிப்படையில் நிரந்திர நீடித்த இயக்கம் (Perpetual motion) வகையைச் சேரும் இந்த "கண்டுபிடிப்பு" ஒரு மாயையே. நிரந்திர நீடித்த இயக்கமென்பதே இயலாதவொன்று என்று சந்தேகத்திற்கிடமின்றி அறியப்பட்டுள்ளது. அப்படியிருக்க அதனைப் பயன்படுத்தி மின்சக்தியினை உற்பத்திசெய்தல் என்பது கற்பனையின் உச்சம். அதனைப் புரிந்துகொள்ளாது இம்முயற்சிக்கு பண உதவிகள் செய்யுமாறு வேறு சொல்கிறது அச்செய்தி. அச்செய்தியில் குறிப்பிட்டிருப்பதுபோல், இப்படியான நிரந்திர நீடித்த இயக்கம் வகையைச் சேர்ந்த ஒரு வடிவமைப்பிற்கு இந்திய மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனம்  காப்புரிமை வழங்கியிருப்பது உண்மையாயின் அந்நிறுவனம் இன்னமும் கற்காலத்திலேயே இருக்கின்றது என்று கூறலாம்.

(5) புகைப்பட "ஆதாரங்களுடன்" வரும் புரட்டுக்கள்

உதாரணம் 1: போடோஷோப் (Photoshop) போன்ற கணினி மென்பொருட்களால் உருவாக்கப்பட்ட அல்லது திரிபு செய்யப்பட்ட புகைப்படங்களை அல்லது திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்ட உருவங்களின் புகைப்படங்களை இணைத்து வரும் 'புகுஷிமா கதிர்வீச்சினால் உருவான இராட்சத ஆமை' போன்ற புரட்டுக்கள். 

மூலம்: இணைய நண்பர்கள்

மேலே தரப்பட்டவை இணையத்தில் நான் கண்ட அல்லது எனது மின்னஞ்சல்/முகப்புத்தகத்திற்கு வந்து சேர்ந்த நூற்றுக்கணக்கான புரட்டுக்களில் சிலவாகும்.

இவற்றை தவிர்ப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரிடமிருந்து பெறும் தகவல்களை நண்பர்களுடன் பகிர்வதாயின் அவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்த்தபின்னரேயே பகிர்வோம் என உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றிற்கு உதவியாக www.hoax-slayer.com போன்ற இணையத்தளங்களை பயன்படுத்தலாம்.


எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
                    - திருவள்ளுவர் 
 

Tuesday 7 August 2012

சமையலில் பயன்படும் வாசனைத் திரவியங்கள்

வெளிநாடொன்றில் தமிழ்ச்சங்கமொன்றின் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது நண்பர்கள் இருவருக்கிடையில் நடந்த உரையாடல் இது:
நண்பர் 1: "வறுத்த வேர்க்கடலை இருந்தா நன்னாயிருக்குமே. போறப்போ கொறிச்சுண்டு போயிரலாம்."
நண்பர் 2: "எங்களிண்ட ஊரில கச்சானைத்தான் வறுத்துச் சாப்பிடுறனாங்கள். நான் கோயிலுக்குப் போறதே அதுக்குத்தான். அதென்ன வேர்க்கடலை?"
நண்பர் 1: "ஓ, அதுவா, பிரவுண் கலரில கோதிருக்கும். உடைச்சாக்க உள்ளார ரண்ணு மூணு பருப்பிருக்கும்."
நண்பர் 2: "கச்சானும் அப்பிடித்தான் இருக்கும்"   
இப்படி பேச்சு வழக்குகளிற்கிடையே மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டிய நிலை சிலவேளைகளில் ஏற்படுவதுண்டு.

அதைவிட இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் வரும்  நிகழ்ச்சிகளில் ஆங்கில மற்றும் இந்தி மொழிக் கலப்பு சர்வ சாதாரணம். அவர்கள் எங்கே தமிழில் பேசுகிறார்கள் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். பெரும்பாலான நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்  ஆங்கில இந்திச் சொற்களுக்கு தமிழ்போன்ற உச்சரிப்புகளையும், தமிழ் வேற்றுமையுருபுகளையும் கொடுத்து, தமிழினுள் உள்வாங்கி, தமிழ்மொழி வளர இடையறாது பாடுபடுகிறார்கள்.  


தொலைக்காட்சியில் சமையல் பற்றிய நிகழ்ச்சியொன்றைப் பார்த்துக் கொண்டிருந்த உறவினரொருவர், "இவங்கள் சொல்லுற சாமான்களை வாங்க இந்தியாதான்  போவேணும் போலயிருக்கு" என்றார். எந்தப் பொருட்களை வாங்கவென்று கேட்டால் "தனியா, லவங்கம், ..." என்று பட்டியல் வந்தது.  

அவரைப் போன்றவர்களுக்காகத் தொகுத்ததே இந்தக்குறிப்பு. முதலில் தமிழ்ப் பெயரும் (இலங்கை / இந்திய தமிழ் பேச்சு வழக்குகளில்), அடுத்ததாக ஆங்கிலப் பெயரும், அடைப்புக் குறிகளினுள் இந்திப்பெயர்களும் தரப்பட்டுள்ளன. 

விதைகளும், பழங்களும் - Seeds and Fruits
  • கடுகு - Mustard seeds (Rai / Sarson)
  • சின்னச்சீரகம் / சீரகம் - Cumin seed (Jeera)
  • பெருஞ்சீரகம் / சோம்பு - Fennel seed (Saunf/Sanchal)
  • வெந்தயம் - Fenugreek seeds (Methi)
  • கொத்தமல்லி / தனியா - Coriander seeds (Dhaniya)
  • மிளகு - Black Pepper Corns / Pepper (Mirchi)
  • ஏலம் / ஏலக்காய் - Cardamom / Green Cardamom (Elaichi)
  • கறுப்பு ஏலக்காய் - Black Cardamom (Kali Elaichi)
  • ஓமம் - Carom seeds / Bishop's Weed seeds (Ajwain)
  • கருஞ்சீரகம் - Black Cumin seed
    • தமிழில் கருஞ்சீரகம் எனும் பொதுப் பெயரால் இரண்டு முற்றிலும் வேறுபட்ட தாவரங்களின் விதைகள் அழைக்கப்படுகின்றன. அவையாவன:  Nigella sativa மற்றும்  Bunium persicum (Syah Jeera).
  • சாதிக்காய் – Nutmeg (Jaiphal)
  • சாதிப்பூ - Mace (Javitri)
    • உண்மையில்  இதுவொரு பூவல்ல, மாறாக பழத்தினுள் சாதிக்காய் விதையைச் சூழ்ந்திருக்கும் உறைபோன்ற மெல்லிய பகுதியே சாதிப்பூ என அழைக்கப்படுகின்றது.
  • எள் - Sesame seeds (Til)
  • கசகசா - Basil seeds (Sabja / Tukmaria)
  • அன்னாசி மொக்கு / மகம்பூ - Star anise (Chakra phool)
  • செத்தல் மிளகாய் - Dried Chilli / Red chili pepper (Lal Mirchi)
  • பச்சை மிளகாய் - Green chili pepper (Hari Mirch)
  • சாம்பார் மிளகாய் - Sambar Chilli
  • புளி / பழப்புளி  - Tamarind (Imli)
  • எலுமிச்சை / தேசிக்காய் - Lime (Nimbu)
  • கொறுக்காய்ப்புளி - Malabar tamarind / Brindall berry (Kudampuli)
  • நெல்லிக்காய் / முழுநெல்லிக்காய் - Indian gooseberry (Amla)
  • கடுக்காய் - Terminalia chebula (Harad / hime)
  • மாதுளம் விதை - Pomegranate seed (Anardana)
  • சீமைச் சோம்பு - Caraway Seed (Siya zira)
  • திப்பிலி - Long pepper (Pippali)
  • வால்மிளகு - Cubeb
  • அசம்டவோமன் - Celery seed (Ajmud)

பூக்களும் மொட்டுக்களும் - Flowers and Buds
  • கிராம்பு / லவங்கம் - Clove (Lavang)
  • குங்குமப்பூ - Saffron (Kesar)

பட்டைகளும் வேர்களும் கிழங்குகளும் - Barks, Roots and Rhizomes

  • கறுவா / இலவங்கப்பட்டை / பட்டை - Cinnamon (Dalchini)
  • இஞ்சி - Ginger (Adrak)
  • வோ்க்கம்பு / வோ்க்கொம்பு / சுக்கு - Dried ginger (Sonth)
  • மஞ்சள் - Turmeric (Haldi)
  • வசம்பு - Sweet Flag
  • அதிமதுரம் - Licorice (Jethimadh, Valmi)

பிசின்களும் பாசிகளும் - Resins and Lichens
  • பெருங்காயம் - Asafoetida (Hing)
  • கல்பசி - lichen (Pathar Ka Phool)

இலை வகைகள் - Leaves
  • கருவேப்பிலை - Curry leaf / Sweet neem leaf (Kadipatta)
  • கொத்தமல்லி கீரை - Coriander leaf (Dhaniya)
  • வெந்தய கீரை  - Fenugreek leaf (Kasoori Methi leaves)
  • புதினா இலை - Mint leaf (Pudina)
  • (பட்டை) - Bay leaf (Tej Patta)

பூண்டு வகைகள் - Bulbs
  • உள்ளி / வெள்ளைப் பூண்டு / பூண்டு – Garlic (Lahsun)
  • சின்ன வெங்காயம் / ஈருள்ளி (கன்னடம்) - Baby Onion, Red Onion, Shallot
    • சின்ன வெங்காயத்தில் பல வகைகள் உள்ளன.
    • யாழ்ப்பாணத்தில் பயிரிடப்படும் வகைகள்: வல்லாரை 60, வல்லாரை 90, வேதாளம், யாழ்ப்பாண உள்ளூர் வகை.
  • பெரிய வெங்காயம் / பம்பாய்  வெங்காயம் - Big onions, Red/purple Onion
    • பெரிய வெங்காயத்தில் பல வகைகள் உள்ளன.

பருப்பு வகைகள் - Nut Varieties
  • முந்திரி - Cashew nut
  • பாதாம் - Almond
  • வேர்க்கடலை / நிலக்கடலை / கச்சான் / மணிலாக்கொட்டை / மல்லாக்கொட்டை- Peanuts

தூள் வகைகள் - Powder Varieties
  • வறுத்த கறித்தூள் - Roasted Curry powder (Sri Lankan)
  • கறித்தூள் - Curry powder 
  • மிளகாய்த் தூள் – Chilli powder
  • குடை மிளகாய்த்தூள் - Paprika powder
  • மாங்காய்த்தூள் - Sour mango powder (Aamchur)
  • கரம் மசாலா - Garam Masala
    • மிளகு, கிராம்பு, கறுவா, சின்னச்சீரகம், கருஞ்சீரகம், பச்சை ஏலக்காய் மற்றும்  கறுப்பு ஏலக்காய் ஆகியவற்றின் கலவை வறுக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.  

ஏனையவை - Others
  • உப்பு / கறியுப்பு - Salt (Namak)
  • வெல்லம் / சர்க்கரை (இலங்கை பேச்சுவழக்கில்) / கருப்பட்டி - Jaggery (Gur)
  • பன்னீர் -     Rose water (Gulab Jal)
  • வினாகிரி - Vineger (Sirka)

Sunday 11 March 2012

இலகுவில் கவிஞர் ஆகுவது எப்படி?

கவிஞராகும் ஆசை உங்களுக்கு உள்ளதா?

பலவிதமான பாடவிதானங்களுக்கு துரித கற்பித்தல் வகுப்புக்கள் (crash courses) நடைபெறும் இக்காலத்தில், துரித கதியில் கவிஞராகுவதட்கான வழிமுறையொன்று இங்கே பகிரப்படுகின்றது. இது இணையத்தில் முகப்புத்தகத்திலும் (Facebook) வலைப்பூக்களிலும் (Blog) உலவும் சில கவிஞர்களிடமிருந்து சமீப காலங்களில் கற்றுக்கொண்ட பாடத்தின் சிறு குறிப்பு (short notes).

இதோ இலகுவில் கவிஞராகுவதட்கான படிமுறைகள்:

முகப்புத்தகத்தில் கவிஞர், கவிஞன், கவிதாயினி போன்ற அடைமொழிகளை உங்கள் பெயருக்கு முன்னால்/பின்னால் இணைத்துக்கொள்ளுங்கள். ஊர்ப்பெயர், காரணப்பெயர், ஏதாவதொரு ஆகுபெயர் போன்றவற்றைக் கொண்டு புனைபெயர் அல்லது அடைமொழி வைத்துக்கொள்வது இன்னமும் சிறப்பானது.

இன்னமும் கவிதை எழுதாமல் கவிஞர் என்று சொல்லிக்கொள்ளக் கூச்சமா? உங்கள் கூச்சத்தினைத் தூர வீசுங்கள். ஏனென்றால் நீங்களும் சுலபமாக கவிஞராகிவிடலாம்.

இதோ அதற்கான படிமுறைகள். தவறாமல் பின்பற்றவும்.

1. இணையவுலகில் பிரபலமானவர்களுடன் முகப்புத்தகத்தில் நண்பராகச் சேர்ந்து கொள்ளுங்கள்.

2. அத்துடன், உங்களைப் போன்று கவிஞராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுடனும் முகப்புத்தக நண்பராகிக்கொள்ளுங்கள். 'கவி', 'கவிஞர்' போன்ற சொற்களை முகப்புத்தக நண்பர்தேடலில் தேடினால் சில நூற்றுக்கணக்கான 'கவிஞர்கள்' சிக்க வாய்ப்புண்டு. அவர்களின் கவிதைகளிட்கெல்லாம் 'ஆகா அற்புதம்', 'பிரமாதம்', 'இதுவல்லவோ கவிதை' என்று கம்பன்கூட நாணும் வகையில் தவறாமல் பின்னூட்டமிட்டு உங்களிட்கான வருங்கால விமர்சகர்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

3. காதல், சாதல், போன்ற வார்த்தைகளுடன் இன்னமும் சில தமிழ் அல்லது தமிழ்போன்ற சொற்களைத் தட்டச்சு செய்துகொள்ளவும். எழுத்துப்பிழைகள் இருந்தாலும் கண்டுகொள்ளத் தேவையில்லை . மேலும் அச்சொற்கள் அகராதிகளிலோ அல்லது நிகண்டுகளிலோ இருக்கவேண்டுமென்ற அவசியமுமில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒத்த ஒலியமைப்பு உள்ள சொற்கள் சிலவாவது இருக்குமாறு பார்த்துக்கொள்வது சிறப்பு.

4. ஒவ்வொரு சொற்களுக்கிடையிலும் அல்லது சொற்றொடர்களுக்கிடையிலும் ஐந்து முதல் பத்து வரையிலான முற்றுப்புள்ளிகளையிட்டு (உதவி: ............ ஐ 'CTRL + C' மூலம் நகலெடுத்துக் கொள்ளலாம்), அவ்வப்போது 'உள்ளிடு' (Enter) விசையை ஒருமுறை அல்லது இருமுறை அழுத்துங்கள். இப்போது கவிதை தயார்.

ஒரு ஹைக்கூ கவிதை வேண்டுமென்றால் 'உள்ளிடு' (Enter) விசையை இருமுறை மட்டும் அழுத்துங்கள். புதுக்கவிதை வேண்டுமென்றால் 'உள்ளிடு' (Enter) விசையை சில தடவைகளாவது அழுத்த மறவாதீர்கள். அல்லது, மரபுக்கவிதை வேண்டுமென்றால் ஒத்த ஒலிநயம் கொண்ட சொற்களுக்குப் பின்னால் 'சுட்டி' (cursor) வருமாறு வைத்து 'உள்ளிடு' (Enter) விசையை அழுத்துங்கள்.

5. உங்களுக்குப் பிடித்த ஒரு சொல்லை அல்லது சில சொற்களை தலைப்பிட்கென தெரிந்தெடுக்கவும். கவிதைக்கான தலைப்பினைத் தெரிந்தெடுக்க முடியாவிட்டால் அவற்றை வாசகர் விருப்பத்திற்கே விட்டுவிடலாம்.

6. உங்கள் கவிதையின் தலைப்பிற்கு அல்லது உங்கள் கவிதையில் அதிகம் தோன்றும் சொல்லிற்குப் பொருத்தமாக அழகான புகைப்படம் அல்லது ஓவியம் ஒன்றை இணையத்தில் நகலெடுக்கவும். அவற்றிற்கு சொந்தக்காரர் உங்கள் நண்பர் கூட்டத்திலோ அல்லது அவர்களின் நண்பர்களாகவோ இல்லாதிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மற்றும்படி உரியவர் யாரென்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டாம். படங்களிட்கான காப்புரிமைகளைக் (copyrights) கண்டுகொள்ளத் தேவையில்லை. காதல் சம்பந்தமான தலைப்பென்றால் அழகிய நடிகையொருவளின் /நடிகனொருவனின் புகைப்படம் நன்றாயிருக்கும். (உதவி: கூகிளின் படங்களிட்கான தேடல் http://www.google.com/imghp?hl=en&tab=wi உரலில் உள்ளது.)

7. முகப்புத்தகத்தில் 'எனது கவிதைகள்' என்று ஒரு படத்தொகுப்பை உருவாக்கி அங்கே இணையத்தில் சுட்ட புகைப்படத்தினைப் பதிவேற்றி, அதன் தரவுகள் பகுதியில் உங்கள் கவிதையைப் பிரதி செய்யுங்கள். 'உங்கள்' புகைப்படத்தினைப் பிரசுரிக்கும்படியாக முகப்புத்தகத்திட்கு அறிவுறுத்துங்கள்.

இதோ! கவிஞராகிவிட்டீர்கள்!! பிரசுரித்தும்விட்டீர்கள்!!!

கொஞ்சம் பொறுங்கள்.... உங்கள் அற்புதமான கவிதை ஆயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைய வேண்டாமா?

8. முகப்புத்தகத்தில் பதிவேற்றிய அப்புகைப்படத்தில் உங்கள் நண்பர்கள் அனைவரையும் தவறாமல் 'பெயர்க்குறியீடு' (tag) செய்யுங்கள். மிக முக்கியமாக இணையவுலகில் பிரபலமானவர்களை 'பெயர்க்குறியீடு' (tag) செய்ய மறந்துவிடவேண்டாம்.

இப்போ உங்கள் கவிதை பெரும் எண்ணிக்கையிலான முகப்புத்தக வாசகர்களைச் சென்றடைந்திருக்கும். குறிப்பாக, பிரபலமானவர்களின் அபிமானிகளான ஆயிரக்கணக்கான வாசகர்கள் உங்கள் கவிதைகளை வாசிக்கும் பெரும்பேறு பெற்றிருப்பார்கள்.

யார் போற்றாவிடினும் உங்கள் நண்பர்கள் குழாமிலுள்ள கவிஞர்கள் நிச்சயம் உங்கள் கவிதையினை மெச்சுவார்கள். மெச்சவேண்டும்.

இப்படிக்கு,
கவிதை இரசனையில்லாதவன்.

பி.கு.: அப்படியே வலைப்பூவொன்றை ஆரம்பித்து உங்கள் கவிதைகளையும் சுட்ட படங்களையும் பதிவேற்றம் செய்து வாசகர் வட்டத்தினை இன்னமும் விரிவுபடுத்தலாம். பணவசதி இருக்குமென்றால் அச்சிட்டு வெளியிடுவதையும் பரிசீலிக்கலாம்.

Saturday 3 March 2012

"போதையனார் தேற்றம்" எனும் மாயை

சமீப நாட்களாக இணையத்தில் உலாவரும் தமிழின் பெருமைகளைப் பேசும் மின்னஞ்சல்களில்/பதிவுகளில் ஒன்று "போதையனார் தேற்றம்" பற்றியது. "போதையனார் தேற்றத்தின்" சிறப்பம்சம் வர்க்கமூலம்(√) இல்லாமலேயே செம்பக்கத்தினை/கர்ணத்தினை கணிக்க முடிகின்றது என நீளுகின்றது அத்தகவல். ஆனால், இங்கே தமிழ் மொழியின் மீதான பற்றினைப் பயன்படுத்தித் தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட தகவல் வழங்கப்படுகின்றது என்பதே உண்மை.

இந்த தகவலின் உண்மைத் தன்மையை அறிய கவனிக்கப்பட வேண்டியவை வருமாறு:
1. இங்கே கணிதவியலின் தர்க்க ரீதியிலான நிறுவுதல்கள் எதுவுமின்றி "தேற்றம்" என்று ஒன்று சொல்லப்படுகின்றது. அடிப்படையில் இங்கே குறிப்பிடப்படும் "தேற்றம்" எனும் சொல், அதன் அர்த்தத்தத்தினை இழந்து நிற்கின்றது.
2. உதாரணம் ஒன்றினை மட்டும் அடிப்படையாக வைத்து எந்த கணித சமன்பாட்டினையும்/கூற்றினையும் தேற்றம் என்று கூற முடியாது.
3. ஒரு தேற்றமானது சகல பொருத்தமான தரவுகளிட்கும் உண்மையாக இருத்தல் வேண்டும்.


இப்போது "போதையனார் தேற்றம்" என்ன சொல்ல விளைகின்றது என்று பார்ப்போம்.

"ஓடும் நீளம் தனை ஒரே எட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"

இதற்குக் கொடுக்கப்படும் பொழிப்புரை வருமாறு:
ஒரு செங்கோண முக்கோணத்தில்:
கர்ணம் = செம்பக்கம் (செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்திட்கு எதிர அமைந்துள்ள மிக நீண்ட நீளமுடைய பக்கம்)
ஓடும் நீளம் = செம்பக்கத்திட்கு அடுத்ததாக நீளமாயுள்ள பக்கம்
குன்றம் = முக்கோணத்தின் மிகச்சிறிய நீளமுடைய பக்கம்


தரப்பட்டுள்ள உதாரணத்தின்படி பக்க நீளங்கள் (3, 4, 5) கொண்ட செங்கோண முக்கோணத்தில்:
ஓடும் நீளம், a = 4
குன்றம், b = 3

"போதையனார் தேற்றத்தின்படி",
c= (a - a/8) + (b/2)
= 4-(4/8) + (3/2)
= 5
கர்ணம், c= 5.

இந்த ஒரு உதாரணத்தை (அல்லது இவ்விலக்கங்களின் மடங்குகளான (6,8,10), (9,12,15) போன்ற எண்கூட்டங்களை) மட்டும் அடிப்படையாகக்கொண்டு இதனைத் தேற்றமென்று கூறப்படுகின்றது.


இப்போது "போதையனார் தேற்றத்தின்" உண்மைத்தன்மையினை மற்றைய பைதகரஸ் எண் கூட்டங்களிட்கும் பார்ப்போம்.


(5,12,13)

ஓடும் நீளம், a = 12
குன்றம், b = 5

"போதையனார் தேற்றத்தின்படி"
c= (a - a/8) + (b/2)
= 12-(12/8) + (5/2)
= 13
கர்ணம், c= 13.

இந்த உதாரணமும் சரி வருகின்றது.


(7,24,25)

ஓடும் நீளம், a = 24
குன்றம், b = 7

"போதையனார் தேற்றத்தின்படி",
c= (a - a/8) + (b/2)
= 24-(24/8) + (7/2)
= 24.5
கர்ணம், c= 24.5 ≠ 25.

இங்கே "போதையனார் தேற்றம்" தடுமாற ஆரம்பிக்கின்றது.


(8,15,17)

ஓடும் நீளம், a = 15
குன்றம், b = 8

"போதையனார் தேற்றத்தின்படி",
c= (a - a/8) + (b/2)
= 15-(15/8) + (8/2)
= 17.125
கர்ணம், c= 17.125 ≠ 17.

இதற்கப்பால் எல்லாமே தப்பான முடிவுகள்தான். அதனைவிட கர்ணமானது ஓடும்நீளத்தினை விட சிறிதான இலக்கமாக வருவதும் குறிப்பிடத்தக்கது.


(9,40,41)
"போதையனார் தேற்றத்தின்படி",
கர்ணம், c= 39.5 ≠ 41 (அத்துடன் 39.5 < 40).


(11,60,61)
"போதையனார் தேற்றத்தின்படி",
கர்ணம், c= 58 ≠ 61 (அத்துடன் 58 < 60).


(12,35,37)
"போதையனார் தேற்றத்தின்படி",
கர்ணம், c= 36.625 ≠ 37.


(13,84,85)
"போதையனார் தேற்றத்தின்படி",
கர்ணம், c= 80 ≠ 85 (அத்துடன் 80 < 84).

இப்படியே (15,112,113), (16,63,65), (17,144,145), (19,180,181), (20,21,29), (20,99,101), (21,220,221), (23,264,265), ...... போன்ற இலக்கங்களுக்கும் தொடர்கின்றது துல்லியமற்ற முடிவுகள். ஆக மொத்தத்தில் போதையனார் கூறியது இரண்டு சந்தர்ப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் ஒரு கூற்று. "தேற்றம்" கிடையாது. ஆக மொத்தத்தில் ஒரு செம்பக்க முக்கோணத்திற்கு பைதகரஸ் தேற்றத்திற்கு பதிலாக "போதையனார் தேற்றத்தினை"ப் பயன்படுத்தினால் பெறப்படும் விடைகளானது மேற்குறிப்பிட்ட இரண்டு சந்தர்ப்பக்கங்கள் (3,4,5), (5,12,13) (அல்லது அவற்றின் மடங்குகள்) தவிர்ந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் துல்லியமற்ற முடிவுகளாகவே இருக்கும்.




Sunday 10 July 2011

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி - தும்பி / தட்டான்

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே

....
கவிஞர்: நா. முத்துக்குமார்
படம்: வெயில்
   








Saturday 11 June 2011

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி - மூக்குத்திப்பூ

மூக்குத்திப்பூவினை பிடுங்கி அதன் காம்பினை பூவுடன் இணையுமிடத்தில் நுள்ளும்பொழுது பூ துள்ளி விழுந்தால் ஆணென்றும் அப்படியே சரிந்து விழுந்தால் பெண்ணென்றும் கூறுவதும், அதில் தேன்குடிக்க வரும் வகைவகையான வண்ணத்துப்பூசிகளைப் பிடித்து ஜாம் போத்தல்களில் விட்டுவைத்து அழகு பார்ப்பதும் (மாலையில் உயிருடன் இருந்தால் விடுதலை) என்று இயற்கையுடன் கொஞ்சிக்குலாவிய அந்தநாட்கள் மீளுமா?

மூக்குத்திப்பூ மேலே வண்ணத்துப்பூச்சி உட்கார்ந்து பேசுதம்மா