மூக்குத்திப்பூவினை பிடுங்கி அதன் காம்பினை பூவுடன் இணையுமிடத்தில் நுள்ளும்பொழுது பூ துள்ளி விழுந்தால் ஆணென்றும் அப்படியே சரிந்து விழுந்தால் பெண்ணென்றும் கூறுவதும், அதில் தேன்குடிக்க வரும் வகைவகையான வண்ணத்துப்பூசிகளைப் பிடித்து ஜாம் போத்தல்களில் விட்டுவைத்து அழகு பார்ப்பதும் (மாலையில் உயிருடன் இருந்தால் விடுதலை) என்று இயற்கையுடன் கொஞ்சிக்குலாவிய அந்தநாட்கள் மீளுமா?
மூக்குத்திப்பூ மேலே வண்ணத்துப்பூச்சி உட்கார்ந்து பேசுதம்மா
எச்சில் தொட்டு அல்லது தண்ணீரில் போட்டு சிறிது நேரத்தில் வெடிக்கும் வெடிக்காய்கள் எனது சிறுபராய நாட்களின் விளையாட்டுப் பொருட்களில் ஒன்று. காணும் போதெல்லாம் பிடுங்கி வெற்று நெருப்பெட்டிகளில் (நெருப்புப்பெட்டிகளில்) சேகரித்து வைத்து வாளிக்குள்ளேயோ, தோட்டக் கிணற்றுக்குள்ளேயோ போட்டு டிக் டிக் என்று அவை வெடிப்பதை பார்த்து மகிழ்வதும், அதையே குறும்பாக மற்றவர்கள் தலைகளில் வைத்துவிட்டு நழுவிவிடுவதும் மறக்கமுடியாத இனிய நினைவுகள்.
இயற்கையுடன் விளையாடி வளர்ந்த நாட்களின் நினைவில் சில்வண்டின் ரீங்காரம் மறக்க முடியாததொன்று. இளவேனிற்கால மாலை நேரங்களில் துணையைக் கவர்ந்திழுக்க ஆண் சில்வண்டுகள் எழுப்பும் ரீங்காரம் கிராமங்களின் அமைதியைச் சீண்டிப்பார்க்கும். மரங்களின் நிறத்துடன் ஒன்றிப்போயிருப்பதாலும் அருகில் சென்றால் ரீங்காரத்தை நிறுத்திவிடுவதாலும் சில்வண்டுகள் எளிதில் புலப்படுவதில்லை.
தொட்டுத் தொட்டு தொட்டாற்சுருங்கி சுருங்குவதைப் பார்த்து மகிழ்ந்த அந்த நாட்கள்... முந்திக் கொண்டு போய் மற்றவர்களை விட முதலில் தொட்டுவிடுவதும், மற்றவர்களுக்குத் தெரியாத தொட்டாற்சுருங்கி வளர்ந்திருக்கும் இடங்களைத் தேடித்தேடி தொட்டவெளியெங்கும் அலைந்து திரிவதும் என்று கழிந்த அந்த இனிய மாலைப் பொழுதுகளின் நினைவில்...
வணக்கம்! எனது நினைவுகளை, இரசித்தவைகளை, கருத்துக்களை, புகைப்படங்கள் மற்றும் எழுத்தின் மூலம் பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சியே இந்தப் பதிவு. உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. வருகைக்கு நன்றி!